சிரியாவிலிருந்து நாடு திரும்ப விரும்பும் 40 மலேசியர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மலேசிய போலிஸ் தெரிவித்துள்ளது.
“பயங்கரவாதத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் சிரியாவில் 65 மலேசியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 40 பேர் எங்களைத் தொடர்புகொண்டு சொந்த நாட்டுக்கே திரும்பி வர விருப்பம் தெரிவித்தனர்.
“நாடு திரும்ப விரும்புவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்,” என்று புக்கிட் அமான் பயங்கரவாதத் தடுப்பு சிறப்புப் பிரிவின் துணைத் தலைமை ஆணையர் அயூப் கான் மைதின் பிச்சை சனிக்கிழமை இரவு தெரிவித்தார்.
“சிரியாவில் உள்ள முகாம்கள் தற்போது மோசமான நிலையில் இருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. குறிப்பாக உணவுத் தட்டுப்பாடு அங்கு உள்ளது.
“மலேசியா திரும்ப விரும்பும் 40 பேரில் 11 பேர் மட்டுமே ஆண்கள். மற்ற அனைவரும் பெண்கள், குழந்தைகள்,” என்று திரு அயூப் செய்தியாளர்களிடம் கூறினார்.
அவர்களை அழைத்து வருவதற்கான பணி ஆரம்பக்கட்டத்திலேயே இருப்பதாகவும் அடுத்தடுத்து செய்ய வேண்டியவை வெளிநாட்டு அமைப்புகளுடன் மேற்கொள்ளப்படும் தகவல்தொடர்பு மற்றும் அரசாங்கம் ஆகியவற்றின் தரப்பிலேயே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், மலேசியாவுக்கு திருப்பி அழைத்துவரப்படும் ஆடவர்கள் அனைவரின் மீதும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும் என்று கூறிய அவர், எந்த மாதிரியான தூண்டுதலுக்கு ஆளானார்கள் என்பதைப் பொறுத்து பெண்கள் நடத்தப்படுவார்கள் என்றும் குழந்தைகள் அனைவரும் மறுவாழ்வுத் திட்டங்களில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் சொன்னார்.
“ஆண்கள் அனைவரும் சிரியாவில் உள்ள அல்-ஹஸாகா சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். பெண்களும் குழந்தைகளும் அகதிகளுக்கான ஐநா தூதரின்கீழ் உள்ள முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்,” என்றார் திரு அயூப்.
கடந்த அக்டோபர் மாதம் ஒரு மலேசியப் பெண்ணும் அவரது இரு குழந்தைகளும் சிரியாவிலிருந்து மலேசியாவுக்குக் கொண்டு வரப்பட்டதாகவும் கணவரை போரில் இழந்த மற்றொரு பெண்ணும் ஓர் ஆடவரும் அதே மாதத்தில் அழைத்து வரப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.