மட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் செயல்பட்டு வரும் ‘கட்டலான்’ பிரிவினைவாத இயக்கத்தின் தலைவருக்கு அந்நாடு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
கட்டலான் குழுவின் துணைத் தலைவராக இருந்த ஓரியோல் ஜங்குவெரஸ் என்பவரும் அவரது குழுவைச் சேர்ந்த சிலரும் 2017ஆம் ஆண்டில் ஸ்பெயினை இரண்டாகப் பிரிப்பதற்கான சதி வேலைகளில் ஈடுபட்டதாக அவர்கள் மீது மட்ரிட்டில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
விசாரணைக்குப் பின் உச்ச நீதிமன்றம் ஆக உச்ச தண்டனையாக 13 ஆண்டுச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
அத்துடன் அவருடன் இணைந்து செயல்பட்டதாகக் கருதப்படும் கட்டலான் இயக்கத்தைச் சேர்ந்த மேலும் கட்டலான் சுதந்திரத்திற்காகப் போராட்டங்களில் ஈடுபட்ட எட்டு தலைவர்களுக்கு 12 ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
2017ஆம் ஆண்டில் இக்குழுவினர், ஸ்பெயினை இரண்டாகப் பிரிக்கும் வகையில் பொதுவாக்கெடுப்பு ஒன்றை நடத்தினர். அந்த வாக்கெடுப்பால் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் ஸ்பெயினில் பதற்றமான சூழல் உருவாகியிருந்தது. இதற்கு கட்டலான் இயக்கத்தின் வட்டாரத் தலைவராக செயல்பட்டு வந்த கார்ல்ஸ் பியூஜ்மண்ட் முக்கிய காரணமாக இருந்தார். அவர் அப்போதே ஸ்பெயினை விட்டு வெளியேறி புருஸ்ஸல்ஸ் நாட்டில் அடைக்கலம் புகுந்தார்.
இந்தத் தண்டனை அறிவிப்பைத் தொடர்ந்து பார்சிலோனாவில் ரயில் நிலையத்தின் வாயிலில் நேற்று முன்தினம் ஏராளமானோர் குந்தியிருப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். மேலும் சில இடங்களில் நேற்றும் போராட்டம் நடத்தப்பட்டன. கட்டலான் பிரிவினைவாதக் குழுவைச் சேர்ந்த தலைவர் ஒருவருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டது வரும் நவம்பர் 10ஆம் தேதி நடக்க
இருக்கும் பொதுத்தேர்தலில் பிரதிபலிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.