அரசியல்வாதியும் முன்னாள் நடிகர், இயக்குநருமான 52 வயது சீமான் (படம்) மலேசியாவுக்குப் பலமுறை வந்ததும் உள்ளூர் அரசியல்வாதிகளைச் சந்தித்ததும் போலிசாருக்குத் தெரியும் என புக்கிட் அமான் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் தலைவர் துணை ஆணையர் அயுப் கான் தெரிவித்தார். இலங்கையின் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் (எல்டிடிஇ) தொடர்பிலிருந்த சந்தேகத்தின்பேரில் மலேசியாவில் கைதான அரசியல்வாதிகளுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்த தமிழ்நாட்டு அரசியல்வாதியின் மீது மலேசிய அதிகாரிகளின் கவனம் திரும்பியுள்ளது.
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என நம்பப்படும் சீமான், தமிழ் நாட்டில் ‘நாம் தமிழர்’ கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பு வகிக்கிறார்.
மலேசியாவின் முன்னணி அரசியல்வாதிகளுடன் சீமான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன. “தகுந்த காரணங்கள் இருந்தால், அவர் நாட்டுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கும்படி குடிநுழைவுத் துறையிடம் கேட்டுக்கொள்வோம். ஆயினும், விடுதலைப் புலிகளுக்கு நிதி அனுப்புவதில் அல்லது அந்தப் பயங்கரவாத இயக்கத்தைப் பரப்புவதில் அவருக்கு எந்த அளவுக்குப் பங்கு இருக்கிறது என்பதை நாங்கள் விசாரிப்போம்,” என ஞாயிற்றுக்கிழமை நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தொடர்பிலான புலன்விசாரணைக்காக, சனிக்கிழமை ஐந்து ஆடவர்கள் மலேசியாவில் கைது செய்யப்பட்டனர். அதற்கு முன்னதாக, கடந்த வியாழக்கிழமை எழுவர் கைது செய்யப்பட்டனர்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை மலேசியா சட்ட விரோத அமைப்பாக வகைப்படுத்தியுள்ளது.
இதற்கிடையே மலேசியாவில் எல்டிடிஇயின் முக்கிய உறுப்பினர் கைதாகியதுடன் ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கிளிநொச்சிக்கு அருகில் உள்ள அம்பாலம்குளத்தில், 36 வயதான ஜோசப் பீட்டர் ராபின்சன் என்பவர் நடத்திவந்த காப்பகத்தைச் சோதனையிட்டபோது ஏராளமான வெடிபொருள்களையும் ஆயுதங்களையும் போலிசார் கைப்பற்றினர். ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, அதே நாளன்று கிளிநொச்சி போலிசாரிடம் புலன்விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டார் ஜோசப்.
சந்தேக நபரிடமிருந்து கிடைத்த தகவலின்படி, ஐந்து கையெறி குண்டுகள், வெடிபொருள்கள், தோட்டாக்கள், துப்பாக்கிகள், கத்தி, கேமரா, இரட்டைத் தொலைநோக்கி, ஏழு மடிக்கணினிகள், நான்கு கைபேசிகள், விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படம் கொண்ட நான்கு டி-சட்டைகள், கறுப்பு முகமூடி ஆகியவற்றை போலிசார் கைப்பற்றினர்.