அடக்குமுறையில் ஹாங்காங் உள்ளதாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுவது பொறுப்பற்ற பேச்சு என்று ஹாங் காங் தலைவர் திருவாட்டி கேரி லாம் (படம்) கூறியுள்ளார்.
நான்கு மாதங்களுக்கும் மேலாக தொடரும் ஆர்ப்பாட்டங்களாலும் போலிசாருடன் ஏற்பட்டு வரும் வன்முறை மோதல்களாலும் ஹாங் காங் நிலைகுலைந்து போயிருக்க, திருவாட்டி லாமின் அரசும் போலிசாரும் அடக்குமுறையைப் பயன்படுத்துவதாக அமெரிக்க செனட்டர் ஜோஷ் ஹோவ்லி உட்பட பல அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாடியிருந்தனர்.
அத்துடன் ஹாங்காங் நாட்டுக்கு உள்ள சிறப்பு வர்த்தக அந்தஸ்தை, அதன் அரசியல் நிலைமையைக் கொண்டு ஆண்டுக்கு ஆண்டு மறுஆய்வு செய்ய வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டு வரவும் இவர்கள் முயன்று வருகின்றனர்.
“மனித உரிமைக்கும் சுதந்திரத்திற்கும் குரல் கொடுக்கும் வகையில் இது ஓர் அமைதிப் போராட்டம் என்று சில வெளிநாட்டு அரசியல்வாதிகள் நினைக்கின்றனர். இதுவரை எந்த வன்முறையையும் பார்க்கவில்லை என்றும் கூறுகின்றனர். ஆனால் இது உண்மையல்ல,” என்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார் திருவாட்டி லாம்.
ஹாங்காங்கைப் பற்றி சில அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னதாகவே தவறான சிந்தனையைக் கொண்டுள்ளனர் என்றும் ஹாங் காங் போலிஸ் அடக்குமுறையில் இயங்கத் தொடங்கியுள்ளது என்றும் திரு ஹோவ்லி கூறியது முற்றிலும் பொறுப்பற்ற, ஆதாரமற்ற பேச்சு என்றும் திருவாட்டி லாம் சுட்டினார்.
இதற்கிடையே தாம் கூறியதில் எந்தவொரு மாற்றமுமில்லை என்று திரு ஹோவ்லி சொன்னார்.
ஹாங்காங் நிலைமையை நேரில் கண்டதாகவும் கேரி லாம் நிலைமையை வேறொன்றாகக் காட்ட நினைத்தால், அவர் பதவியை விட்டு விலகலாம் என்றும் அவர் தமது டுவிட்டில் யோசனை கூறினார்.