சிரியா மீதான துருக்கியின் போர் நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக துருக்கி மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
சிரியாவிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதாக திரு டிரம்ப் அறிவித்த பிறகு அங்குள்ள குர்திய போராளிகள் மீது துருக்கிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதலில் குர்தியப் போராளிகள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் பலியாகினர்.
துருக்கியின் இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. போர் நடவடிக்கைகளை நிறுத்தாவிடில் துருக்கியின் பொருளாதாரம் முற்றிலும் அழிக்கப்படும் என இதற்குமுன் அமெரிக்க அதிபர் டிரம்ப், துருக்கிய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
ஆனால், இந்த எச்சரிக்கையை துருக்கிய அரசு கண்டுகொள்ளவில்லை. “அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி எங்கள் கொள்கைகளை மாற்றிக்கொள்ள மாட்டோம். குர்திய போராளிகள் மீதான போர் நடவடிக்கைகளை நிறுத்தப்போவதில்லை,” என துருக்கிய நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மெவுல்ட் காவ்சக்லோ தெரிவித்தார்.
துருக்கி தனது போர் நடவடிக்கைகளைத் தொடர்ந்த நிலையில், துருக்கி மீதான பொருளாதாரத் தடைகளை விதிக்கும் நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
துருக்கிய அரசு மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளதாகவும் துருக்கியுடனான 100 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையையும் முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அதேநேரத்தில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசிக்கு டிரம்ப் எழுதிய கடிதத்தில் துருக்கிய பிரச்சினையை ‘தேசிய அவசரநிலை’யாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் கருவூலத் துறை, ஏற்கெனவே துருக்கி பாதுகாப்பு அமைச்சர் ஹுலுசி அகர், உள்துறை அமைச்சர் சுலேமான் சோய்லு மற்றும் எரிசக்தி மந்திரி பாத்தி டான்மேஸ் ஆகியோரை அதன் பொருளாதாரத் தடைகள் பட்டியலில் வைத்துள்ளது.
இத்தடை உத்தரவானது, பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் நடவடிக்கைகள், வடகிழக்கு சிரியாவில் அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை மேலும் மோசமடைய வழிவகுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள துருக்கிய அரசாங்கத்தின் தனிநபர்கள், நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகளை பரிசீலித்து விதிக்க மாநில மற்றும் கருவூலத் துறைகளுக்கு அதிகாரம் அளிக்கிறது.