ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ இரண்டாவது முறையாக அக்டோபர் 20 ஆம் தேதி பதவியேற்கவிருப்பதை அடுத்து ஜகார்த்தாவில் பாதுகாப்பு உச்சக்கட்ட விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக இந்தோனீசியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலும் நாட்டின் மற்ற பகுதிகளிலும் தொடர்ச்சியான போராட்டங்களும் வன்முறைத் தாக்குதல்களும் நடந்து வருகின்றன.
இந்நிலையில் நடக்கவிருக்கும் பதவியேற்பையொட்டி நாட்டில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாவண்ணம் அந்நாட்டு போலிசார் பாதுகாப்பை உச்ச விழிப்புநிலையில் வைத்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் இந்தோனீசியாவில் சர்ச்சைக்குரிய மசோதா முன்மொழியப்பட்டதை அடுத்து மாணவர்கள் பெரிய அளவில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதே வேளையில் கடந்த வியாழக்கிழமை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் விராந்தோ ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தினருடன் தொடர்புடைய சிலரால் கத்தியால் இரு முறை குத்தப்பட்டார்.
மத்திய ஜகார்த்தாவில் உள்ள நாடாளுமன்றக் கட்டடத்தில் அதிபர் ஜோக்கோவி மற்றும் துணை அதிபர் மருஃப் அமின் ஆகியோரின் பதவியேற்பு நிகழ்ச்சியில் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது, சீன துணை அதிபர் வாங் ஸிஷான் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
பதவியேற்பை ஒட்டி ராணுவம் மற்றும் தேசிய போலிஸ் படை ஆகியவற்றைச் சேர்ந்த ஏறக்குறைய 27,000 பேர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுபடுத்தப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.