சவூதி அரேபியாவில் புனித நகரமான மதினா அருகே நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் தனியார் பேருந்தும் கனரக வாகனமும் மோதிக்கொண்டதில் வெளிநாட்டு யாத்ரிகர்கள் 35 பேர் மாண்டனர்; மேலும் நால்வர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அல் ஹம்னா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்கள் அனைவரும் அரபு, ஆசிய நாடுகளைச் சேர்ந்த யாத்ரிகர்கள் எனக் கூறப்பட்டாலும் அவர்கள் எந்தெந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. அவர்கள் மதினாவில் இருந்து மெக்காவிற்குப் பேருந்தில் சென்றபோது விபத்து நிகழ்ந்தது.
அவர்கள் சவூதியில் வசித்து வந்த வெளிநாட்டவர்கள் என ‘ஒகாஸ்’ பத்திரிகைச் செய்தி குறிப்பிட்டுள்ளது.
சன்னல் கண்ணாடிகள் நொறுங்கிய நிலையில், அந்தப் பேருந்து தீப்பற்றி எரிவதைப் படங்கள் காட்டின.
மதினா வட்டாரத்தின் ஆளுநரான இளவரசர் ஃபைசல் பின் சல்மான், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்குத் தமது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார். அதுபோல, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் விபத்தில் மாண்டோரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்தும் காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டிக்கொள்வதாகவும் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் சவூதி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.