மெக்சிகோவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 311 இந்தியர்கள் அவர்களின் சொந்த நாட்டிற்குத் திருப்பியனுப்பப்பட்டனர்.
அனுமதியின்றி தொடர்ந்து தங்கியிருந்த அந்த இந்தியர்கள் டொலுக்கா நகர விமான நிலையத்தில் இருந்து போயிங் 747 விமானம் மூலமாக புதுடெல்லிக்கு அனுப்பப்பட்டதாக மெக்சிகோ குடிநுழைவு ஆணையம் நேற்று முன்தினம் அறிக்கை மூலம் தெரிவித்தது.
மெக்சிகோ எல்லை வழியாக சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காவிடில் அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரிகள் உயர்த்தப்படும் என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கடந்த ஜூன் மாதம் எச்சரிக்கை விடுத்திருந்தார். அதன் எதிரொலியாகவே இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
மெக்சிகோவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் அடையாளம் காணப்பட்டு அழைத்து வரப்பட்ட அந்த இந்தியர்கள், நாடு கடத்தப் படுமுன் வெராக்ரூஸ் மாநிலத்தில் உள்ள தடுப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.