லண்டன்: பிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே புதிய பிரக்சிட் உடன்பாட்டில் இணக்கம் ஏற்பட்டுள்ளது என்று பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறி வித்துள்ளார்.
பிரக்சிட் குறித்து பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பியத் தலைவர்கள் ஓன்றுகூடி விவாதிக்கவிருக்கும் வேளையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆனால் புதிய பிரக்சிட் உடன்பாட்டுக்கு பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடாளு மன்றங்களின் ஒப்புதலைப் பெற வேண்டும். இந்த நிலையில் நாடாளு மன்றத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருந்து வரும் வட அயர்லாந்து ஜனநாயக ஐக்கிய கட்சி, பிரதமர் போரிஸ் ஜான்சனின் பிரக்சிட் திட்டத்தை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது.
இதனால் நேற்று பவுண்டு நாணயத்தின் மதிப்பு அதிரடியாக சரிந்தது. முன்னதாக வட அயர்லாந்து கட்சி வெளியிட்ட அறிக்கையில் பிரக்சிட் உத்தேச திட்டத்துக்கு ஆதரவு அளிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.
பல ஆண்டுகளாக இழுத்துக் கொண்டிருந்த நிலையில் பிரக்சிட் உடன்பாட்டை நெருங்கிவிட்டதாக பிரிட்டனும் ஐரோப்பிய ஒன்றியமும் நேற்று கூட்டாக அறிவித்தன.
இதனால் உடன்பாடு இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தவிர்க்கப் பட்டுள்ளது.
இரவு முழுவதும் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஐரோப்பிய ஒன்றியத்தின் தரப்பில் பேசிய மிஷல் பார்னியர், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அதே சமயத்தில் பிரான்சின் துணை வெளியுறவு அமைச்சர், உடன்பாடு காணப்படும் நிலையில் இருந்தாலும் உத்தரவாதமில்லை என்று சொன்னார்.