கோலாலம்பூர்: தென்சீனக் கடலில் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதால் அதற்குத் தயாராகக் கடற்படை ஆற்றல்களை மேம்படுத்துவது அவசியம் என்று மலேசிய வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
அண்மைய வாரங்களாக தென்சீனக் கடலில் பதற்றம் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் சீனாவுக்கு சவால்விடுக்கும் வகையில் அது சொந்தம் கொண்டாடும் தீவுக்கு அருகே அமெரிக்க போர்க் கப்பலான ‘டெஸ்டிராயர்’ கடந்து சென்றது.
இந்த நிலையில் தென்சீனக் கடல் விவகாரம் குறித்து அமைச்சர் சைஃபுதீன் எச்சரித்துள்ளார்.
“எங்களுடைய பகுதிக்குள் பெரிய நாடுகள் அத்துமீறி நுழைந்தால் எதிர்ப்புத் தெரிவிக்கும் குறிப்புகளை வெளியிடுவோம். தென்சீனக் கடலில் பிரச்சினைகள் ஏற்பட்டால் அதனைச் சமாளிக்கும் வகையில் மலேசிய கடற்படை, கடற்துறை ஆற்றலை பெருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
மலேசியாவின் சரவா மாநில கடற்பரப்பில் உள்ள தெற்கு தீவுத் திட்டுகளுக்கு அருகே 24 மணி நேரம் ரோந்துக் காவலில் ஈடுபடும் சீனாவுக்கு ஈடாக மலேசிய கடற் படை இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
“சீனாவிலிருந்து வரும் சுற்றுக் காவல் படகுகளைவிட மலேசிய கடற்படை சிறிதாக உள்ளது,” என்று நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் சைஃபுதீன் கூறினார்.
“தென்சீனக் கடலில் பிரச்சினைகள் ஏற்பட விரும்ப வில்லை. ஆனால் வளங்களை மேம்படுத்த வேண்டும். தென்சீனக் கடலில் பெரிய நாடுகளுக்கு இடையே பிரச்சினைகள் ஏற்பட்டால் நமது கடற்பரப்பை தற்காக்கும் ஆற்றல் நமக்கு இருக்க வேண்டும்,” என்று அவர் சொன் னார். ஆண்டுக்கு 3.4 டிரில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் மதிப்புள்ள பொருட்கள் கடந்து செல்லும் தென்சீனக் கடல் வழிப் பாதையின் பெரும் பகுதியை சீனா சொந்தம் கொண்டாடி வரு கிறது.
இருந்தாலும் அது சொந்தம் கொண்டாடும் சில பகுதிகளை மலேசியா, வியட்னாம், பிலிப்பீன்ஸ், புருணை, தைவான் ஆகிய நாடுகளும் சொந்தம் கொண்டாடு கின்றன.
தென் சீனக் கடலுக்கு ராணுவ விமானங்களையும் போர்க் கப்பல் களையும் அனுப்பி அமெரிக்கா, இவ்வட்டாரத்தில் பதற்றத்தை அதிகரித்து வருகிறது என்று சீனா குற்றம்சாட்டியுள்ளது.