கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக ‘டெய்லி எஃப்டி’ எனும் இலங்கை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாத இயக்கமாக மலேசியா அறிவித்துள்ள நிலையில், அதன் ஆதரவாளர்கள் எனக் கூறப்பட்ட 12 பேர் அண்மையில் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஜனநாயக செயல் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் இருவரும் அடங்குவர்.
இதையடுத்து, கோலாலம்பூரில் உள்ள இலங்கைத் தூதரகத்திலும் தூதரின் அதிகாரபூர்வ இல்லத்திலும் மலேசிய போலிஸ் பாதுகாப்பைப் பலப்படுத்தி இருப்பதாக இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
புக்கிட் அமான் பயங்கரவாதத் தடுப்பு சிறப்புப் பிரிவு போலிசாரால் கைது செய்யப்பட்ட அந்த 12 பேர் இடையே பெரிய அளவில் பணப் பரிமாற்றம் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்தி கூறியது.
“விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் இலங்கை தூதரகம் அணுக்கமாக கண்காணித்து வருகிறது. இதன் தொடர்பில் மலேசிய வெளியுறவு அமைச்சிடம் இருந்து மேலதிக தகவல்களுக்காகக் காத்திருக்கிறோம்,” என்று இலங்கை வெளியுறவு அமைச்சு பேச்சாளர் கூறியுள்ளார்.
இம்மாதம் 10, 12ஆம் தேதிகளில் போலிஸ் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளின்போது காப்புறுதி முகவர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
அவர் கோலாலம்பூரில் உள்ள இலங்கை தூதரகத்தில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாக போலிஸ் சந்தேகிக்கிறது.
இன்னொருவருடன் சேர்ந்து அவர் அந்தத் தாக்குதலுக்குத் திட்டமிட்டதாகக் கூறிய பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் தலைவர் அயூப் கான் மைதீன் பிச்சை, ஆயினும் அது எம்மாதிரியான தாக்குதல் என்ற விவரத்தை வெளியிடவில்லை.