ஜகார்த்தா: இந்தோனீசியாவில் அதிபர் ஜோக்கோ விடோடோ நாளை மீண்டும் அதிபராகப் பதவி ஏற்கவுள்ளார். தாம் பதவிஏற்றதும் புதிய அமைச்சரவை பற்றி அறிவிக்கப்போவதாக அவர் தனது டுவிட்டரில் நேற்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமது டுவிட்டர் பக்கத்தில் நேற்றும் ஒரு பதிவை இட்ட அவர், அதில் “2014ஆம் ஆண்டு அதிபராகப் பதவியேற்றது முதல் ஐந்து ஆண்டுகளுக்கு பலதரப்பட்ட உள்கட்டமைப்புப் பணிகளில் எனது நிர்வாகம் கவனம் செலுத்தியது. பாலங்கள், நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள், விமான நிலையங்கள், எல்லைச் சோதனைச்சாவடிகள் உள்ளிட்ட துறைகளின் மேம்பாடுகளில் கவனம் செலுத்தப்பட்டது,” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தோனீசியாவை 2030ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கு வெளிநாட்டு முதலீடுகளை அதிகளவில் ஈர்க்க வேண்டும். அதற்காக புத்தாக்க பொருளியல் திட்டங்களை வகுப்பதோடு உள்கட்டமைப்பு மேம்பாட்டிலும் தொடர்ந்து அதிபர் ஜோக்கோவி கவனம் செலுத்துவார்.
மேலும் அமைச்சரவை மாற்றங்களின்போது மின்னியல் துறை, புத்தாக்க பொருளியல் மற்றும் முதலீட்டுத் துறை என்ற இரண்டு புதிய அமைச்சுகள் உருவாக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
2019 ஏப்ரல் 17ஆம் தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜோக்கோவி வெற்றி பெற்று தமது பதவியைத் தக்கவைத்துக் கொண்டார். நாளை மீண்டும் பதவியேற்கும் ஜோக்கோவி 2024 அக்டோபர் 20ஆம் தேதி வரை அதிபர் பதவியை வகிப்பார்.