ஹாங்காங்: அரசாங்கத்திற்கு எதிராக நான்கு மாதங்களாக ஹாங்காங்கில் நடைபெற்று வரும் போராட்டங்கள் இப்போதைக்கு முடிவுறுவதாகத் தெரியவில்லை.
முக்கியமான மெட்ரோ ரயில் தடங்களில் நேற்று மனிதச் சங்கிலி போராட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், நாளை பெரிய அளவிலான ஜனநாயகப் பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இரு வாரங்களுக்கு முன் முகக்கவசம் அணியத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், அதன்பின்னரே போராட்டம் தீவிரம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த புதன்கிழமை மனித உரிமை ஆர்வலர் ஜிம்மி ஷேம் கொடூரமாகத் தாக்கப்பட்டது ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தி, வன்முறையைத் தூண்டும் முயற்சி என விமர்சிக்கப்பட்டது.
இதனிடையே, ஹாங்காங் தலைவர் கேரி லாம் பதவி விலக வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் பலரும் கோரியுள்ளனர்.