பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், தனது பிரெக்சிட் ஒப்பந்தத்தை அக்டோபர் 31ஆம் தேதி காலக்கெடுவுக்குள் நிறைவேற்ற முடியுமா என்பதை இன்று மாலை (அக்டோபர் 22) வாக்கெடுப்பின்மூலம் அறியவிருக்கிறார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான இந்த ஒப்பந்தம் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
ஏற்கனவே இருமுறை வாக்கெடுப்பு மறுக்கப்பட்ட பிறகு, விலகல் ஒப்பந்த மசோதாவைத் திரு ஜான்சன் அறிமுகப்படுத்தினார். இந்த மசோதா, பிரெக்சிட் ஒப்பந்தத்தைச் சட்டமாக அமல்படுத்தும். இதன்வழி, ஒப்பந்தத்தை விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அவர் திட்டமிடுகிறார்.
லண்டன் நேரப்படி இரவு சுமார் 7 மணியளவில் இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பு நடைபெறும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் முந்திய வாக்களிப்புகள், அறிக்கைகள் ஆகியவற்றை ஆராய்கையில், திரு ஜான்சன் ஆதரவு பெறுவதற்குப் போதுமான வாக்குகள் கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், அதற்கடுத்த வாக்கெடுப்பில், மசோதாவை விரைந்து நிறைவேற்றும் காலத்திட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்கவேண்டும். இந்த ஆதரவு கிடைக்காவிட்டாலும், பிரெக்சிட் ஒப்பந்தத்தை அவரால் நிறைவேற்றமுடியும். ஆனால், காலக்கெடுவுக்குள் அதனைச் செய்வதற்கான வாய்ப்பு குறைவு.
“பொதுமக்கள் மேற்கொண்டு தாமதிப்பதை விரும்பவில்லை, மற்ற ஐரோப்பியத் தலைவர்களும் நானும்கூட விரும்பவில்லை,” என்று மின்னஞ்சல்வழி வெளியிட்ட அறிக்கையில் திரு ஜான்சன் குறிப்பிட்டார். “பிரெக்சிட் ஒப்பந்தத்தை அக்டோபர் 31ஆம் தேதி நிறைவேற்றிவிட்டு, அடுத்த காரியத்திற்குச் செல்வோம்,” என்றார் அவர்.