காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் செயல்பாட்டை விமர்சித்திருந்த மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது, தமது கருத்தை ஒருபோதும் மீட்டுக்கொள்ளமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றியபோது, இந்தியா காஷ்மீரில் அத்துமீறி நுழைந்து, ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக டாக்டர் மகாதீர் பேசியிருந்தார்.
அவரது இப்பேச்சுக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. அது, இரு நாட்டு வர்த்தக உறவுகளையும் பாதிக்கக்கூடும் எனச் சொல்லப்படுகிறது.
செம்பனை எண்ணெய் உற்பத்தியில் உலகின் ஆகப் பெரிய இரண்டாவது நாடாக மலேசியா விளங்குகிறது. அந்நாட்டிடம் இருந்து இவ்வாண்டு அதிகளவில் செம்பனை எண்ணெய் இறக்குமதி செய்த நாடு இந்தியாதான்.
இந்த நிலையில், மும்பையை மையமாகக் கொண்ட ‘சால்வென்ட் எக்ஸ்ட்ராக்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா’ எனும் வர்த்தக அமைப்பு, மலேசியாவிடம் இருந்து செம்பனை எண்ணெய் இறக்குமதி செய்வதைத் தவிர்க்குமாறு தனது உறுப்பினர்களை வலியுறுத்தி இருக்கிறது.
இந்நிலையில், “நாங்கள் அறிவு பூர்வமாகப் பேசுகிறோம். காஷ்மீர் பிரச்சினையில் எங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள மாட்டோம்,” என்று டாக்டர் மகாதீர் செய்தியாளர்களிடம் நேற்று கூறினார்.
“ஐக்கிய நாட்டுத் தீர்மானங்களை அனைத்து நாடுகளும் ஏற்று நடக்கவேண்டும் என்றே நாங்கள் சொல்கிறோம். அது முடியாதெனில், ஐநா மன்றம் ஏற்படுத்தப்பட்டதன் பயன் என்ன?” என்றும் அவர் கேட்டார்.
இதனிடையே, மலேசியாவின் செம்பனை எண்ணெய்யைப் புறக்கணிக்கும்படி மும்பை வர்த்தக அமைப்பு விடுத்துள்ள அறைகூவல் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்தும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் வழிகளையும் ஆராய்வோம் என்று டாக்டர் மகாதீர் தெரிவித்துள்ளார்.