வீட்டுக்கு வெளியில் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்த 25 வயது மலேசியரான பி.புவனேஸ்வரன், தாம் கொளுத்திப்போட்ட பட்டாசின் மீதே வழுக்கி விழுந்ததில், பலத்த வெடிப்பு ஏற்பட்டது.
அந்த வெடிப்பின் காரணமாக அவரது முகத்திலும் உடலிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. கூலாய் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவர் கொண்டு செல்லப்பட்டதாக அவரது நண்பர் ஒருவர் தெரிவித்தார்.
மேல் சிகிச்சைக்காக ஜோகூர் பாருவில் உள்ள சுல்தானா அமினா மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட புவனேஸ்வரன், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட, உறவினர்கள், நண்பர்கள் எனப் பலரும் கூடியிருந்த வேளையில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் சோகத்தில் முடிந்தது.
சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்த புவனேஸ்வரன் கலகலப்பானவர் என்று கூறப்பட்டது.
சம்பவத்தின் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.