தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக 52 வயது மலேசிய பள்ளி ஆசிரியர்மீது செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 29) செபாங் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
மலேசியாவில் பயங்கரவாத அமைப்பாகக் கருதப்படும் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய பொருட்களை வைத்திருந்ததாக ரெங்கசாமி எனும் சுந்தரம் ரெங்கம் மீது குற்றம் சாட்டப்பட்டது.
டிசம்பர் 16ஆம் தேதி விசாரணை தொடங்கும் என்று நீதிபதி சய்ஃபுலக்மால் முகம்மது சாஆத் ஆணையிட்டார்.
சுந்தரத்தின் வழக்கறிஞர் கீர்த்திராஜ் ராஜா சுந்தரம், சுந்தரத்தைப் பிணையில் விடுவிக்க கோரிக்கை விடுத்தார்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுக்குப் பிணை வழங்கமுடியாது என அரசாங்க வழக்கறிஞர் அஸ்லினா ரஸ்டி வாதாடினார்.
பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு முன்னதாக இம்மாதம் கைது செய்த 12 பேரில் சுந்தரமும் ஒருவர்.
மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினர் ஜி சாமிநாதன், செரம்பான் ஜெயா உறுப்பினர் பி.குணசேகரன் ஆகியோர்மீதும் மற்றொரு சந்தேக நபர்மீதும் செவ்வாய்க்கிழமை மலாக்காவிலுள்ள ஆயர் கெரோ நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற சந்தேக நபர்கள் மீது வெவ்வேறு மாநிலங்களில் தனித்தனியே குற்றம் சாட்டப்பட்டது.