லண்டனில் 39 சடலங்களுடன் பிடிபட்ட லாரியின் தொடர்பிலான வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோது, இந்தச் சம்பவத்தில் அனைத்துலக அளவிலான ஆள்கடத்தல் கும்பலுக்குத் தொடர்பிருப்பதாகக் கூறப்பட்டது.
கொலை, ஆள்கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் அந்த லாரி ஓட்டுநர் மீது சுமத்தப்பட்டன.
குளிர்பதனப்படுத்தப்பட்ட லாரி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட சடலங்கள்தொடர்பான சம்பவம் ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு ஆகிய பகுதிகளிலிருந்து மேற்கத்திய நாடுகளுக்கு ஏழைகள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
அந்த லாரியின் ஓட்டுநரான 25 வயது மௌரிஸ் ராபின்சன் நேற்று கெம்ஸ்ஃபோர்ட் நீதிமன்றத்தில் இணையக் காணொளி வழியாக முன்னிலையானதாகக் கூறப்பட்டது.
பெயர், முகவரி, குடியுரிமை போன்றவற்றை உறுதிப்படுத்த மட்டுமே ராபின்சன் பேசியதாகச் சொல்லப்பட்டது.
39 பேரின் கொலை, ஆள்கடத்தல் சதி, சட்டவிரோதக் குடியமர்த்தல் சதி, பண மோசடி உட்பட 43 குற்றச்சாட்டுகள் ராபின்சன் மீது பதிவாகின.
இங்கிலாந்துக்குள் பெருமளவில் சட்டவிரோதமாகக் குடியமர்த்தும் செயலில் அனைத்துலக அளவிலான ஆள்கடத்தல் கும்பல் ஈடுபட்டுள்ளதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் கூறினார். இதனுடன் தொடர்புடைய மற்ற சந்தேக நபர்களைத் தேடும் பணி தொடர்கிறது.
ராபின்சன் பிணை கோரவில்லை. அடுத்த மாதம் 25ஆம் தேதி வரை ராபின்சனைக் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.