டாக்டர் மகாதீர் முகமதுவுக்குப் பதிலாக தாம் மலேசியாவின் பிரதமராவதை துரோகிகள் தடுத்து நிறுத்த முயற்சி செய்வதாக பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்துப் பேசிப்பேசி தாம் சோர்வடைந்திருப்பதாகக் கூறும் போர்ட் டிக்சன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், பொருளியல் வளர்ச்சி, மக்களின் நல்வாழ்வு போன்ற முக்கியமான அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார்.
இதன் காரணமாக பிரதமர் பதவி பற்றி தாம் பேச விரும்பவில்லை என்று கோத்தா கினபாலுவில் நேற்று நடைபெற்ற சாபா பிகேஆர் மாநாட்டில் பிகேஆர் கட்சி உறுப்பினர்களிடையே திரு அன்வார் குறிப்பிட்டார்.
“நாட்டின் எட்டாவது பிரதமராக இன்னும் காத்திருப்பீர்களா,” என்று கேட்டதற்கு, “நான் கடந்த 20 ஆண்டுகளாகக் காத்திருக்கிறேன். பரவாயில்லை. கவலை வேண்டாம்,” என்று பதிலளித்துள்ளார் திரு அன்வார்.
“கடவுள் விரும்பினால் அது நடக்கும்,” என்று கூறிய திரு அன்வார், தலைமைத்துவ மாற்றத்துக்கு தாம் அழுத்தம் கொடுக்கவில்லை என்றார்.
யார் பிரதமராக இருக்கவேண்டும் என்பதை பக்கத்தான் ஹரப்பான் தலைமைத்துவ மன்றம்தான் நிர்ணயிக்கும் என்று பிரதமர் மகாதீர் நேற்று முன் தினம் கூறியது குறிப்பிடத்தக்கது. அடுத்த தேர்தல் வரை டாக்டர் மகாதீரே பிரதமராக நீடிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருத்துரைத்ததையடுத்து பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.