தாய்லாந்தின் மன்னர் மகா வஜ்ஜிரலொங்கோர்ன், மேலும் நான்கு அரண்மனை அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்துள்ளதாக அம்மன்னரின் அரண்மனையிலிருந்து அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. மன்னரின் துணைவியாக இருந்த 34 வயது சினீனாட் வோங்வஜ்ஜிராபாக்டி பதவியிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்புகள் செய்யப்பட்டன.
வெளியேற்றப்பட்ட அதிகாரிகளில் இருவர் படுக்கை அறை பாதுகாவலர்கள் என்பது அந்த அறிவிப்புகளில் தெரியவந்துள்ளது. பிறர் மனை உறவு, மிகத் தீய நடத்தை ஆகியவற்றில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்படும் அவர்கள், அரசவையினருக்கான ஒழுக்கத்திற்குப் புறம்பாக நடந்துகொண்டதாகக் கூறடப்பட்டது.
அத்துடன், அரண்மனை காவலர்களாகப் பணிபுரிந்த இரண்டு ராணுவ அதிகாரிகள் தங்களது கடமையைச் சரிவர செய்யாது, தங்களது ராணுவத் தகுதிக்கும் பட்டங்களுக்கும் ஒவ்வாத விதத்தில் நடந்துகொண்டதற்காகப் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் அரண்மனை அறிவித்தது.

