லண்டன்: பிரிட்டனில் வரும் டிசம்பர் மாதம் பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 12ஆம் தேதி அன்று தேர்தல் நடத்த நாடாளுமன்றத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு அமோக ஆதரவு கிடைத்ததைத் தொடர்ந்து தேர்தல் தேதி முடிவானது.
பிரிட்டனின் 100 ஆண்டுகால வரலாற்றில் டிசம்பரில் பொதுத் தேர்தல் நடைபெறுவது இதுவே முதல் முறை.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையை அகற்றுவதற்காக முன்கூட்டியே தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலக முன்னதாக மார்ச் 29ஆம் தேதி காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அதன் பிறகு மூன்று முறை அதனை தாமதப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக்கொண் டது. தற்போது ஜனவரி 31ஆம் தேதி புதிய காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் பல தோல்விகளைச் சந்தித்துள்ள நிலையில் டிசம்பர் 12ஆம் தேதி தேர்தல் நடத்துவதற்கான மசோதாவை போரிஸ் ஜான்சன் தாக்கல் செய்தார். இதற்கு ஆதரவாக 438 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இருபது பேர் மட்டுமே எதிர்த்து வாக்களித்தனர்.
கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களைச் சந்தித்த பிறகு பேசிய பிரதமர் ஜான்சன், நாடு ஒன்றுபட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் பிரெக்சிட் நடந்தேற வேண்டும் என்றும் கூறினார்.
நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கு முன்பு பேசிய அவர், பிரெக்சிட்டுக்கு ஏற்பட்டுள்ள தடையால் நாட்டின் பொருளியல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சொன்னார்.
இதற்கிடையே பொதுத் தேர்தலில் போட்டி கடுமையாக இருக்கும் என்று பிரதமர் ஜான்சன் கூறியுள்ளார். தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரிமி கோர்பைன், முன்கூட்டியே தேர்தல் நடத்துவது நாட்டை உருமாற்றுவதற்கு கிடைத்த அரிய வாய்ப்பு என்று கூறினார்.