துபாயில் விழுந்த லாட்டரி சீட்டு ஒன்றில் கிட்டத்தட்ட $5.5 மில்லியன் சிங்கப்பூர் டாலர்கள் மதிப்புள்ள பரிசுத் தொகையை வென்றுவிட்டோம் என்று தெரியாமலேயே இந்திய ஊழியர் ஒருவர் மாயமாகிவிட்டார். எனினும் அவரிடம் பரிசுத் தொகையைக் கொடுக்கவேண்டும் என்று பரிசுத் தொகை வழங்கும் நிறுவனம் வலை வீசித் தேடியது.
ஐக்கிய அரபு அமீரகத்தில், அபுதாபி பிக் டிக்கெட் லாட்டரி குழுக்கள் மாதம்தோறும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த மாதத்திற்கான பரிசை கேரளாவின் செங்கானூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனு ஸ்ரீதரன் (28) வென்றுள்ளார்.
ரூ.29 கோடியை ($15 மில்லியன் திராம்) பரிசாக வென்ற அந்த இளைஞரை, லாட்டரி நிறுவனம் கடந்த சில நாட்களாக தேடி வந்துள்ளது. லாட்டரியில் வெற்றிபெற்றது தெரியாமல் இருந்த அந்த இளைஞரை, தீவிர தேடுதலுக்கு பிறகு சமீபத்தில் லாட்டரி நிறுவனம் கண்டுபிடித்தது.
துபாயில் பணியாற்றி வரும் ஸ்ரீனு ஸ்ரீதரன் தன்னோடு பணியாற்றும் 21 பேருடன் இணைந்து இந்த லாட்டரியை வாங்கியுள்ளார். இதில் 20 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். பரிசு அறிவிக்கப்பட்டவுடன், அந்தத் தொகையை தனது நண்பர்களுடன் சமமாக பங்கிட்டுகொள்ளப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.