பெட்டாலிங் ஜெயா: அழகு ராணிப் போட்டி ஒன்றில் மலேசியாவை மலேசியக் குடியரசு எனக் குறிப்பிட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
மலேசியா ஒரு குடியரசு நாடல்ல. மலேசியா என்று அந்நாடு அதிகாரபூர்வமாக அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், மியன்மார் தலைநகர் யங்கூனில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற மிஸ் கிறிஸ்டல் ஏஞ்சல் இன்டர்நேஷனல் 2019 அழகு ராணிப் போட்டி யில் மலேசியாவைச் சேர்ந்த போட்டியாளர் ஒருவரை மிஸ் மலேசியக் குடியரசு எனக் குறிப்பிட்டதும் மலேசியர்கள் அதிருப்திக் குரல் எழுப்பினர்.
இதுதொடர்பாக மலேசியர்கள் பலர் இணையத்தில் அதிருப்தி தெரிவித்தனர். மலேசியாவைச் சேர்ந்த இரு பெண்கள் இந்த அழகு ராணிப் போட்டியில் பங்கேற்றனர்.
ஒருவர் மிஸ் மலேசியா என்றும் இன்னொருவர் மிஸ் மலேசியக் குடியரசு என்றும் அழைக்கப்பட்டனர். எதிர்ப்பு கிளம்பியதும் போட்டியின் ஏற்பாட்டாளர்கள் மன்னிப்பு கேட்டுக்கொண்டனர். மிஸ் மலேசியக் குடியரசு என்று அழைக்கப்பட்ட போட்டியாளரை மிஸ் போர்னியோ என்று அழைத்தனர். ஆனால் போர்னியோ தனிநாடு கிடையாது என்றும் போர்னியோவின் ஒரு பகுதி மலேசியாவுக்குச் சொந்தமானது என்றும் மலேசியர்கள் சாடியுள்ளனர்.

