கத்தியால் தாக்கிய கணவரிடமிருந்து வெட்டுக் காயங்களுடன் தப்பி, தாமாகவே காரை மருத்துவமனைக்கு ஓட்டிச்சென்ற கர்ப்பிணி ஒருவர் அழகிய ஆண் குழந்தையை ஈன்றெடுத்துள்ளார்.
மலேசியாவின் புத்ராஜெயாவில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் குறித்து புத்ராஜெயா மருத்துவமனையின் மருத்துவர் போலிசில் தெரிவித்தார்.
அந்த 37 வார கர்ப்பிணியின் விரல், வலது கரம், வயிறு, முதுகு போன்ற இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்தன. 35 வயதான அந்தப் பெண்ணை 39 வயதான அவரது கணவர் தாக்கியதாகக் கூறப்பட்டது.
மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் சென்ற அந்தப் பெண்மணி பின்னர் மகப்பேறு பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
விவரம் அறிந்து, அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்ற போலிசார் அவரது கணவரைக் கைது செய்ததுடன், தாக்குதலுக்கு அவர் பயன்படுத்திய ஆயுதத்தையும் போலிசார் கைப்பற்றினர்.
தாக்குதலுக்கான காரணம் பற்றி விசாரணை நடத்தப்படுவதாக போலிசார் குறிப்பிட்டனர்.