மலேசியாவின் பென்-போர்னியோ விரைவுச்சாலை வழியாக 65 வயது ஆடவர் ஓட்டிச்சென்ற கார் சேற்றுக்குள் பாய்ந்ததில், அந்த ஆடவர் சேற்றில் மூழ்கி உயிரிழந்தார்.
நேற்று காலை எட்டு மணியளவில் பென்-போர்னியோ விரைவுச்சாலை வழியாகச் சென்றுகொண்டிருந்த சான் பெக் லாம், காரின் கட்டுப்பாட்டை இழந்ததில் அது சாலையை விட்டு 10 மீட்டர் தொலைவில் இருந்த சேற்றுக்குள் விழுந்தது.
சேற்றுக்குள் பாதி மூழ்கியிருந்த வாகனத்தில் சிக்கிக்கொண்ட திரு சான் வெளியில் வர முடியாமல் மூழ்கிவிட்டதாக மிரி வட்டார தீ மற்றும் மீட்புப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதிகாரிகள் சம்பவ இடத்தை அடைந்தபோதே திரு சான் உயிரிழந்துவிட்டதாகவும் பின்னர் அவரின் உடலை மீட்டு போலிசாரிடம் ஒப்படைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
மிரி மற்றும் வட சரவாக்கின் மற்ற பகுதிகளில் நேற்று காலை கடும் மழை பெய்ததாக கூறப்பட்டது.