பொந்தியான்: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் இன்னொரு புதிய பொருளியல் மண்டலத்தை உருவாக்க அந்நாட்டின் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
ஜோகூரில் உள்ள தஞ்சோங் பியாய் தொகுதிக்கு இடைத்தேர்தல் நெருங்கி வருகையில், மலேசியாவின் பொருளியல் விவகார அமைச்சர் அஸ்மின் அலி நேற்று இதனை அறிவித்தார். பரிந்துரைக்கப்படும் புதிய பொருளியல் மண்டலம் பற்றிய விவரங்களைத் தமது அமைச்சு மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது தலைமை தாங்கும் பொருளியல் செயல் மன்றத்திடம் சமர்ப்பிக்கும் என திரு அஸ்மின் கூறினார்.
புதிய பொருளியல் மண்டலத்தை நீண்டகாலத் திட்டம் என அமைச்சர் அஸ்மின் வர்ணித்தார்.
“பிரதமரின் கடப்பாடு, தற்போதைய தலைமைத்துவம் ஆகியவற்றின் துணையோடு புதிய பொருளியல் மண்டலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என நான் நம்புகிறேன்,” என்று இடைத்தேர்தலுக்கான பிரசாரக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் திரு அஸ்மின் கூறினார். ஜோகூர் மாநிலத்தில் ஏற்கெனவே இஸ்கந்தர் மலேசியா என்று அழைக்கப்படும் பொருளியல் மண்டலம் இருக்கிறது.
அதில் பல சொகுசு கோண்டோமினியங்களும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களும் கட்டப்பட்டுள்ளன.
புதிய திட்டம் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பண்டார் மலேசியாவிலிருந்து ஜோகூர் வரை உள்ள சிறிய நகரங்களை மேம்படுத்த உதவும் என்று திரு அஸ்மின் நம்பு கிறார்.
“நான் முன்பு கூறியது போல கிள்ளான் பள்ளத்தாக்கிலும் பெரிய நகரங்களிலும் மட்டுமே மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவதை நாங்கள் விரும்பவில்லை.
“தஞ்சோங் பியாய் போன்ற சிறு மாவட்டங்களையும் மேம்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்,” என்றார் அவர்.
“இடைத்தேர்தலுக்காக இந்தத் திட்டம் அறிவிக்கப்படவில்லை. தஞ்சோங் பியாய் தொகுதியையும் மற்ற வட்டாரங்களையும் மேம்படுத்த அத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அமரர் முகம்மது ஃபரித்வாஸ் கடப்பாடு கொண்டிருந்தார்.
“முன்னாள் துணை அமைச்சர் என்கிற முறையில் கோலாலம்பூருக்கு வந்தபோதெல்லாம் மேம்பாட்டுப் பணிகளுக்காக அவர் என்னைச் சந்தித்து விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தார்,” என்று திரு அஸ்மின் தெரிவித்தார்.
தஞ்சோங் பியாய் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த டாக்டர் முகம்மது ஃபரித் செப்டம்பர் 21ல் மாரடைப்பு காரணமாக கால மானார்.