ஹாங்காங்கில் நேற்று காலை ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் மீது போலிஸ் அதிகாரி துப்பாக்கிச்சூடு நடத்தியதையடுத்து, அந்நகரில் பதற்றநிலை உச்சத்தை எட்டியுள்ளது.
ஹாங்காங் மத்திய பகுதியில் நேற்று ஒன்றுதிரண்ட நூற்றுக்கணக்கான அலுவலக ஊழியர்கள், அங்கு நின்ற கலவரத் தடுப்பு போலிசாரை சாடினர். போலிசாரைக் “கொலைகாரர்கள்” என அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
ஹாங்காங் சீனப் பல்கலைக்கழகத்தில் சாலைத் தடுப்புகளைப் போட்ட அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கலவரத் தடுப்பு போலிசார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினர்.
ஹாங்காங் அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஆர்ப்பாட்டக்காரர்களை நிதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டது.
“மற்றவர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கும் அனைத்து செயல்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்,” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹாங்காங்கின் வடகிழக்கே உள்ள சாய் வான் ஹோ பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரை போலிஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டதை ஹாங்காங் போலிஸ் உறுதிப்படுத்தியது.
துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதையடுத்து, அந்த 21 வயது ஆர்ப்பாட்டக்காரர் கண்கள் திறந்திருக்க, ரத்தம் படிந்த தரையில் விழுந்து கிடப்பதை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட படங்கள் காட்டின.
அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
வேறு இரு இடங்களிலும் அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டதாக போலிஸ் தெரிவித்தது.
ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் மீது போலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தியிருப்பது இது மூன்றாவது முறை. ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க போலிசார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசுவது வழக்கம் என்றாலும், வாரநாள் ஒன்றில் பணி நேரத்தின்போது அதிகாரிகள் அவ்வாறு செய்வது அரிது.