மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் நிதியில் 42 மில்லியன் ரிங்கிட்டை மோசடி செய்தததாக அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் 7 குற்றச்சாட்டு
களுக்கு எதிராக தமது தற்காப்பு வாதத்தை முன்வைக்குமாறு கோலாலம்பூரில் உள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளை அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் நிரூபித்திருப்பதால், அவற்றின் மீது திரு நஜிப் தமது எதிர்வாதங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதி முகம்மது நஸ்லான் முகம்மது கஸாலி நேற்று கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பில் தீர்ப்பளிக்கப்பட்டபோது நிதானத்துடன் காணப்பட்ட திரு நஜிப், தற்காப்பு வாதத்தை முன்வைத்து தாம் சாட்சியமளிக்க இருப்பதாக பின்னர் தெரிவித்தார்.
அப்படியென்றால், அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் திரு நஜிப்பை குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தக்கூடும்.
நம்பிக்கை மோசடி தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகள், கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய மூன்று குற்றச்சாட்டுகள், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய ஒரு குற்றச்சாட்டு ஆகியவற்றை திரு நஜிப் எதிர்நோக்குகிறார்.
2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கும் 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் அந்த மோசடிகளை அவர் புரிந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக, அரசு தரப்பு வழக்கு விசாரணை 58 நாட்கள் நீடித்தது. இதன் தொடர்பில், இவ்வாண்டு ஜூலை 4ஆம் தேதியிலிருந்து 57 பேர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர். எதிர்த்
தரப்பு வழக்கு விசாரணை அடுத்த மாதம் 3ஆம் தேதி தொடங்கும்.