பாக்தாத்: போராட்டக்காரர்கள் மீது வன்முறையைப் பயன்படுத்துவதை நிறுத்தும்படியும் தேர்தல் முறையைச் சீரமைத்து விரைவில் தேர்தல் நடத்தும்படியும் ஈராக் அரசாங்கத்தை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
அடிப்படை வசதிகள் பற்றாக்குறை, வேலைவாய்ப்பின்மை போன்ற காரணங்களுக்காக கடந்த அக்டோபர் 1ஆம் தேதி ஈராக்கில் போராட்டம் வெடித்தது. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல போராட்டக் களம் மாறியது. 2003ஆம் ஆண்டு அங்கு அறிமுகப் படுத்தப்பட்ட இன அடிப்படையிலான அதிகாரப் பகிர்வு முறையால் அரசியல்வாதிகள் மட்டுமே பலனடைவதால் அம்முறையை ரத்து செய்ய வேண்டும் என்பது போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையாக மாறிவிட்டது.
ஆயினும், ஆயுதமின்றிப் போராடும் இளையர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிக் குண்டுகளைப் பயன்படுத்த, 280க்கும் மேற்ப்ட்டோர் கொல்லப்பட்டனர்.