கோத்தா கினபாலு: கடலில் சிக்கி தத்தளித்தவரைக் காப்பற்றுவதற்காகக் கடலில் குதித்த ஆடவர் மாண்டுபோனது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மலேசியாவின் சாபா மாநிலம், குடாட் மாவட்டத்தில் உள்ள கெலம்பு கடற்கரைக்கு நேற்று முன்தினம் குடும்பத்துடன் சுற்றுலா சென்றார் அப்துல் சாலி ஹம்ஸா, 47, என்ற அந்த ஆடவர். அப்போது, கடல் அலைகளில் சிக்கி மீள முடியாமல் ஒருவர் தவிப்பதைக் கண்ட திரு அப்துல், அவரைக் காப்பாற்றும் நோக்கில் கடலுக்குள் சென்றார்.
ஆனால், என்ன காரணத்தாலோ திரு அப்துல் உயிரிழந்துவிட்டார். கடலில் சிக்கிய அந்த இன்னொருவர் கையில் அகப்பட்டதைப் பிடித்துக்கொண்டு மிதந்தபடி இருக்க, பின்னர் மீட்புப் படையினரால் கரைசேர்க்கப்பட்டார்.
நேற்று முன்தினம் மாலை 5.30 மணி அளவில் உதவி கோரி அழைப்பு வந்ததாக சாபா தீயணைப்பு, மீட்புப் படைத் தலைவர் கதீஸா ரஹபான் கூறினார்.
மீட்புப் படையினரில் ஒரு பகுதியினர் கடலில் தத்தளித்தவரை மீட்கும் முயற்சியில் இறங்க, மற்றவர்கள் திரு அப்துலைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
கடைசியாகப் பார்த்த இடத்தில் இருந்து நூறு மீட்டர் தொலைவில் திரு அப்துல் சாலியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இதய இயக்க மீட்பு சிகிச்சை மூலம் அவரை உயிர்ப்பிக்க முயன்றும் பலன் கிட்டாமல் போனது. திரு அப்துலின் மனைவியும் பிள்ளைகளும் அவரது உடலைக் கண்டு கண்ணீர் விட்டபடி இருந்ததாகக் கூறப்பட்டது.