லா பாஸ்: பொலிவியாவின் முன்னாள் அதிபர் இவோ மொராலெஸுக்கு மெக்சிகோ அரசு தஞ்சம் வழங்க முன்வந்துள்ளது.
சர்ச்சைக்குரிய தேர்தலுக்கு எதிராக கடந்த சில வாரங்களாக நடைபெறும் போராட்டங்களைத் தொடர்ந்து, பதவியில் இருந்து தாம் விலகுவதாக மொராலெஸ் அறிவித்த ஒரு நாளுக்குப் பின்னர் மெக்சிகோவின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
கோக்கோ விவசாயியான திரு மொராலெஸ், 2006ஆம் ஆண்டு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வறுமை ஒழிப்பு, பொலிவியாவின் பொருளியல் மேம்பாடு போன்ற செயல்பாடுகளால் அவர் புகழ்பெற்றார்.
ஆனால், அரசியல் சாசன விதிகளுக்கு முரணாக கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் நான்காவது முறையாக அதிபர் பதவிக்கு அவர் போட்டியிட்டது பெரும் சர்ச்சையானது. இந்தத் தேர்தலில் மோசடிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.