கோலாலம்பூர்: மலேசிய காவல் துறைத் தலைவராக அப்துல் ஹமீது படோர் கடந்த மே மாதம் நியமிக்கப்பட்டதிலிருந்து 252 காவல் துறை அதிகாரிகளும் உறுப்பினர்களும் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு இருப்பதாக உள்துறை துணை அமைச்சர் அஜிஸ் ஜம்மான் தெரிவித்துள்ளார்.
காவல்துறை இந்த பிரச்சினையை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. எந்தவொரு அதிகாரியும் அல்லது உறுப்பினரும் போதைப்பொருள் குற்றத்தில் ஈடுபட்டதாகவோ அல்லது குற்றவாளியாகவோ கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைகளில் பொதுச் சேவை விதிமுறைகளின் விதிகளுக்கு உட்பட்ட எச்சரிக்கை, பதவி இறக்குதல், பதவி நீக்கம் செய்யப்படுதல் ஆகியவை அடங்கும் என்று அவர் கூறினார்.போதைப்பொருள் உள்ளிட்ட தவறான செயல்களுடன் நீண்டகாலமாக தொடர்புபடுத்தப்பட்ட குற்றங்களை ஒப்புக்கொள்ளுமாறு அப்துல் ஹாமிது காவல் துறையினருக்கு வெளிப்படையாக அறிவுறுத்தியுள்ளார்.
அண்மைய காலங்களில், போதைப்பொருள் சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளின் கைது நடவடிக்கை தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது.