அதிபர் தேர்தலில் போட்டியிட பலர் தமக்கு நெருக்குதல் அளித்து வருவதாக அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சரான ஹிலரி கிளிண்டன் தெரிவித்திருக்கிறார். இருந்தபோதும் எதிர்வரும் அதிபர் தேர்தலில் அந்தப் பதவிக்காகத் தாம் இப்போதைக்கு போட்டியிடப் போவதில்லை என அவர் கூறினார். தமது மகளுடன் இணைந்து பிபிசி வானொலிக்கு தாம் பேட்டி அளித்திருந்தபோது திருமதி கிளிண்டன் அவ்வாறு கூறினார்.
தங்களது புதிய நூல் ஒன்றைப் பிரபலப்படுத்த இவர்கள் இருவரும் பிரிட்டனுக்குச் சென்றுள்ளனர்.
2016ஆம் ஆண்டின் அதிபர் தேர்தலில் திருமதி கிளிண்டன், தற்போதைய அதிபர் டோனல்ட் டிரம்ப்பிடம் தோல்வியுற்றதைத் தொடர்ந்து, அடுத்தாண்டு தேர்தலில் திரு டிரம்ப்புடன் அவர் மீண்டும் மோதக்கூடும் என்பது பற்றிய செய்திகளை அமெரிக்க ஊடகங்கள் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றன. இத்தகைய ஊகங்களுக்கு உறுதியான எந்த பதிலையும் அளிக்கமால் வந்த திருமதி கிளிண்டன், அடுத்த தேர்தலில் போட்டியிடுவது குறித்து இப்போதைக்கு தமக்கு எந்தவொரு திட்டமும் இல்லை எனக் கூறியுள்ளார்.
நேற்று அவர் அளித்த பேட்டியின்போது, திரு டிரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறுவதே தமது விருப்பம் எனத் தெரிவித்த திருமதி கிளிண்டன், இதற்கான வலுவான பிரசாரத்தை அமைப்பதற்கு ஜனநாயகக் கட்சியினருக்கு உதவப்போவதாகத் தெரிவித்தார்.
"மறுபடியும் நீங்கள் போட்டியிடப்போகிறீரா?" என்று கேட்கப்பட்டதற்கு, “நான் முடியவே முடியாது என எதற்கும் சொல்லப்போவதில்லை,” என்று திருமதி கிளிண்டன் பதிலளித்தார்.