ஜகார்த்தா: மேடானில் நேற்று முன்தினம் நிகழ்ந்த மனித வெடிகுண்டு தாக்குதலுக்குப் பிறகு இந்தோனீசியாவெங்கும் உள்ள 19 விமான நிலையங்களில் பாதுகாப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் மேடான் போலிஸ் தலைமையகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஆறு பேர் காயம் அடைந்தனர்.
மேடானில் குலாலானாமு விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்ட விமான நிலையங்களில் பெரும்பாலானவை இந்தோனீசியாவின் மேற்குப் பகுதியில் உள்ளன. பாடாங்கில் உள்ள மினங்கபாவ் அனைத்துலக விமான நிலையம், பலேம்பாங்கில் உள்ள சுல்தான் மஹ்முட் படாருதீன் அனைத்துலக விமான நிலையம் ஆகியவற்றிலும் பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
“இந்தோனீசிய அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் அனைத்து விமான நிலையங்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய நாங்கள் செயல்படுவோம். அங்கு பயங்கரவாத தாக்குதல்கள் நிகழாதபடி பார்த்துக்கொள்வோம். பயணி
களுக்கு வழங்கப்படும் சேவை தொடர்வதை நாங்கள் உறுதி செய்வோம்,” என்று விமான நிலையங்களை நிர்வகிக்கும் அரசாங்க அமைப்பான அங்காசா புராவின் தலைவர் முகம்மது அவாலுதீன் நேற்று தமது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.