கோலாலம்பூர்: 1எம்டிபியின் கணிக்குத் தணிக்கை அறிக்கையைத் தமக்குச் சாதகமாக மாற்றி அமைத்த குற்றம் தொடர்பான வழக்கை ஒத்திவைக்கும்படி மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமை தொடங்கி நவம்பர் 29ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. வழக்கு விசாரணையை ஜனவரி 13ல் தொடங்க நஜிப் விண்ணப்பம் செய்துள்ளார்.
66 வயது நஜிப் மொத்தம் ஐந்து வழக்குகளை எதிர்கொள்கிறார். அவற்றில் நான்கு 1எம்டிபியுடன் நேரடியாக தொடர்புடையவை. அவருக்கு எதிராக ஊழல், கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குதல் ஆகிய குற்றங்களின் பேரில் 42 குற்றச்சாட்டுகள் பதிவாகி உள்ளன.
1எம்டிபியின் ஒரு பிரிவாக இருந்த எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் தொடர்பான வழக்கு அடுத்த மாதம் 3ஆம் தேதியிலிருந்து 19ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த வழக்கிற்குத் தயாராக தமது வழக்கறிஞர்களுக்கு அடுத்த மாதம் 2ஆம் தேதி வரை மட்டும் நேரம் இருப்பதாக நஜிப் தெரிவித்தார்.