தெஹ்ரான்: ஈரானில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதை எதிர்த்து மக்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டதற்கு இஸ்லாமிய குடியரசின் எதிரிகளும் வெளிநாட்டு சதியும்தான் காரணம் என்று சாடியுள்ளார் அந்நாட்டு மூத்த தலைவர் அயதொல்லா அலி காமேனி.
50% பெட்ரோல் விலையுயர்வு தவிர, மானிய முறைகளிலும் கடுமையான கட்டுப்பாடுகளை ஈரான் அரசு விதித்துள்ளது.
ஒரு காருக்கு மாதம் 60 லிட்டர் பெட்ரோல் மட்டுமே வழங்கப்படும் என்றும் அந்த அளவுக்கு மேல் வாங்க வேண்டுமானால் அதற்கு 300% கூடுதலாக பணம் தர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட இந்த விலையுயர்வின் காரணமாக இரண்டு நாட்களாக ஈரான் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போராட்டக்காரர்களை கலைக்க போலிசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசினர்.
மத்திய ஈரானின் சிர்ஜானில் நேற்றுமுன்தினம் இரவு ஓர் எரிபொருள் சேமிப்புக் கிடங்கைத் தாக்கி மக்கள் அதற்கு தீ வைக்க முயன்றனர். தடுக்க முயன்ற பாதுகாப்பு படையினருக்கும் பொதுமக்களுக்கும் மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில் பேசிய ஈரான் மூத்த தலைவர் அயதுல்லா அலி கமேனி, “இந்த முடிவு சிலருக்கு கவலையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நாசவேலை, தீவைப்பு என்பது எங்கள் மக்களால் அல்ல, கொடூரர்களால் செய்யப்படுகிறது.
“ஈரானின் எதிரிகள் எப்போதுமே நாசவேலை, பாதுகாப்பு மீறல்களை ஆதரித்து வருகின்றனர்,” என்று கூறியதாக அந்நாட்டு தொலைக்காட்சி தெரிவித்தது.
இதற்கிடையே, ஈரானின் யாஷித் நகரில் நடந்த ஆர்ப்பாட்டங்களின் போது போலிசாருடன் ஏற்பட்ட மோதலையடுத்து, 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானோர் உள்ளுர்வாசிகள் அல்ல என்று உள்ளூர் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
ஆர்ப்பாட்டங்களின்போது ஒருவர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்தாகவும் பிபிசி செய்தி கூறுகிறது.
பெட்ரோல் மீதான மானியங்களை நீக்குவதன் மூலம் கிடைக்கும் வருவாய் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவி செய்ய பயன்படுத்தப்படும் என்று அரசு கூறுகிறது.
2018ல் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதில் இருந்து ஈரான் எண்ணெய் ஏற்றுமதியில் கடுமையான தடைகளை எதிர்கொண்டு வரும் நிலையில், அங்கு பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.