தொடர் வன்முறையால் ஹாங்காங் நிலைகுலைந்திருக்கும் வேளையில், பலதுறைதொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துக்குள் இருந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்
களைக் காப்பாற்ற இணைய
வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல்கலைக்கழக வளாகத்துக்குள் இருக்கும் போராட்டக்காரர்களில்
பலர் படுகாயம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
பல்கலைக்கழகத்துக்குள் இருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களை போலிசார் தாக்குவதாகவும் அவர்களிடமிருந்து போலிசாரின் கவனத்தைத் திசை திருப்ப வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு இணையவாசிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
அப்போதுதான் காயமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்கலைக்கழகத்தைவிட்டு வெளியேறும்போது அவர்களைக் கைது செய்ய காத்திருக்கும் போலிசாரிடமிருந்து தப்பிக்கலாம் என்று இணையவாசிகள் கூறுகின்றனர்.
பல்கலைக்கழக வளாகத்தைவிட்டு வெளியேறிய குறைந்தது 40 பேரை போலிசார் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து பல்கலைக்கழக வளாகத்துக்குள் இருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் வளாகத்துக்கு வெளியே இருக்கும் போலிசாருக்கும் இடையே கடுமையான சண்டை நிகழ்ந்து வருகிறது.
போலிசாரைக் குறிவைத்து பல்கலைக்கழக வளாகத்துக்குள் இருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டுகளையும் கவண் வில் பயன்படுத்தி செங்கற்களையும் வீசினர்.
அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் போலிசார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் ஆர்ப்பாட்டக்
காரர்களைச் சிதறடிக்க முயன்றனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் மீது தொடர்ந்து பெட்ரோல் குண்டுகளை வீசியும் அம்புகளை எய்தும் தாக்குதல் நடத்தினால் அவர்களுக்கு எதிராக உண்மையான தோட்டாக்கள் பயன்படுத்தப்படும் என்று போலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், மதிய உணவு வேளையின்போது பல்கலைக்கழக வளாகத்தில் இருந்தவாறு ஆர்ப்பாட்டம் நடத்துவோருக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கானோர் திரண்டனர்.
பல்கலைக்கழக வளாகத்துக்குள் இருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களைக் காப்பற்ற வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர்.
போராட்டத்தில் ஈடுபடும் கிட்டத்தட்ட 70லிருந்து 100 மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தைவிட்டு வெளியேற முயன்றதாகவும் போலிசார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியதால் அவர்கள் மீண்டும் வளாகத்துக்குள் பின்வாங்கியதாகவும் பலதுறைத்தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தற்காலிகத் தலைவர் திரு கென் வூ உள்ளூர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பல்கலைக்கழக வளாகத்துக்குள் குறைந்தது 500 ஆர்ப்பாட்டக்காரர்கள் இருப்பதாக அவர் கூறினார். குடிநீர் இன்னும் இருப்பதாகக் கூறிய திரு வூ உணவு போன்ற மற்ற அத்தியாவசியப் பொருட்கள் குறைந்து வருவதாக தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாது, ஆர்ப்பாட்டக்காரர்களில் பலர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் அவர் கூறினார். உள்ளூர் நேரப்படி நேற்று நண்பகல் 12 மணி அளவில் முகக்கவசம் அணிந்த ஆர்ப்பாபட்டாக்காரர்கள் பல்கலைக்கழகத்தைச் சுற்றி போலிசார் வைத்திருக்கும் தடுப்புகளை மீறி வெளியேற முயன்றபோது போலிசார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினர். ஆயுதங்களை விட்டுவிட்டு, முகக்கவசங்களை அகற்றிவிட்டு சினோங் வான் ரோடு சவுத் பாலத்தின் உயர் மாடியிலிருந்து வெளியேறும்படி ஆர்ப்பாட்டக்காரர்களை போலிசார் கேட்டுக்கொண்டனர்.
இதற்கிடையே, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக ஹாங்காங் போலிசார் எடுக்கும் கடுமையான நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அது கேட்டுக்கொண்டது.