நியூயார்க்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கலிஃபோர்னியாவில் உள்ள பிரென்ஸோ பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
பிரென்ஸோ நகரின் ஒரு வீட்டில் பெரிய திரையில் 35 பேர் ஒன்றாக அமர்ந்து காற்பந்து போட்டியைப் பார்த்து கொண்டிருந்தனர். அவர்களில் பல சிறுவர், சிறுமிகளும் இருந்ததாக போலிசார் தெரிவித்துள்ளனர்.
அப்போது உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத ஒருவர் சரமாரியாக சுட்டதில் சம்பவ இடத்திலேயே நால்வர் பலியாகினர். அவர்கள் 25க்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என்று தகவல்கள் கூறுகின்றன.
10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ள சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபருக்கும் பலியானவர்க ளுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்னர் கலிஃபோர்னியாவின் பள்ளியில் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று மாணவர்கள் உயிரழந்தனர். தன்னை தானே சுட்டுக் கொண்ட அந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.