சோல்: அமெரிக்காவுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தையை எளிதாக்குவதற்கு தென்கொரியாவுடன் அந்நாடு நடத்தும் கூட்டு ராணுவப் பயிற்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று வடகொரியா தெரிவித்துள்ளது.
நல்லெண்ண அடிப்படையில் இம்மாதம் நடக்கவிருந்த கூட்டு ராணுவப் பயிற்சியைத் தள்ளிவைப்பதாக அமெரிக்காவும் தென்கொரியாவும் தெரிவித்தன.
“இது குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள வடகொரிய மூத்த அதிகாரி கிம் யாங் ஜோல் கூறுகையில், “கூட்டு ராணுவப் பயிற்சியை ஒத்திவைப்பது என்பது பொருத்தமற்றதாக உள்ளது.
“இந்தக் கூட்டு ராணுவப் பயிற்சியை அமெரிக்கா கைவிட வேண்டும் அல்லது ஒருமுறையாவது நிறுத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்,” என்றார்.
அணுவாயுதக் களைவு தொடர்பான பேச்சுவார்த்தையில் புதிய சலுகைகளை வாஷிங்டன் தந்தாலொழிய அமெரிக்காவுடன் மாநாட்டில் பங்கேற்க வடகொரியாவிற்கு விருப்பம் இல்லை என பியோங்யாங் நேற்று முன்தினம் கூறியது.
வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து மூன்று முறை சந்தித்துள்ளனர். ஆனால், இவ்வாண்டு வியட்னாமின் ஹனோய் நகரில் இரு தலைவர்களுக்கும் இடையே நடந்த உச்சநிலை மாநாட்டைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை முடங்கிப்போய் உள்ளது.