ஹாங்காங்: ஹாங்காங் அடிப்படை சட்டத்தின்கீழ் பிறப்பிக்கப்படும் உத்தரவு, அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டதா என்பது பற்றித் தீர்ப்பளிக்கும் அதிகாரம் ஹாங்காங் உயர் நீதிமன்றத்துக்கு கிடையாது என சீனா தெரிவித்துள்ளது.
தேசிய மக்கள் காங்கிரஸ் நிலைக் குழுவின் சட்ட விவகார ஆணையப் பேச்சாளர் யான் டான்வெய் இதனைத் தெரிவித்தார்.
“ஹாங்காங் சிறப்பு நிர்வாக வட்டாரத்தின் சட்டம், ஹாங்காங்கின் அடிப்படை சட்டத்தோடு ஒத்துப்போகிறதா என்பதை நிலைக் குழு மட்டுமே தீர்மானிக்க வேண்டும்,” என்று அவர் சொன்னார்.
வேறு எந்த அமைப்புக்கும் அதுபற்றி முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை என்றார் அவர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் முகமூடி அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானது என ஹாங்காங் உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்திருந்ததைத் தொடர்ந்து அந்தப் பேச்சாளரின் கருத்து வெளிவந்துள்ளது.
இதற்கிடையே, ஹாங்காங்கில் ஒரே நாளில் கிட்டத்தட்ட 1,100 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங் சீன பல்கலைக்கழகத்தில் 3,900க்கும் அதிகமான பெட்ரோல் குண்டுகளை போலிசார் கண்டெடுத்தனர். ஹாங்காங்கில் இத்தனை பெட்ரோல் குண்டுகள் ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறை.
செய்தியாளர்களிடம் நேற்று பேசிய போலிஸ் பேச்சாளர் ஒருவர், ஹாங்காங் சீன பல்கலைக்கழகத்திலும் ஹாங்காங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திலும் உள்ள ஆய்வுக்கூடங்களில் இருந்த ரசாயனங்கள் களவுபோனதாக கூறினார்.