முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட ஹாங்காங் பலதுறைத் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர்கள் விவகாரத்தை அமைதியான முறையில் கையாளுமாறு போலிசை நிர்வாகத் தலைவர் கேரி லாம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்னும் கலைந்து செல்லாமல் பல்கலைக்கழக வளாகத்திற்குள் இருக்கும் மாணவர்கள் 18 வயதுக்குக் கீழ் இருந்தால் அவர்களை உடனடியாகக் கைது செய்யாமல் நிலைமையைக் கையாளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்ட 600க்கும் மேற்பட்டவர்கள் இரவோடு இரவாக தப்பிச் சென்றுவிட்டார்கள் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறிவிட்டார்கள். அவர்களில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் 18 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்கள்.
அதன் பிறகு 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்கு எஞ்சி இருந்த நிலையில் நேற்றுக் காலை திருவாட்டி கேரி லாம் பேசிக்கொண்டு இருந்த நேரத்தில் மேலும் 50 போராட்டக்காரர்கள் தப்பியதாகவும் அவர்களில் பலர் வெப்ப குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் தப்பித்த வேளையில் சிலருக்கு காலில் காயம் ஏற்பட்டதாகவும் ‘சௌத் சைனா மார்னிங் போஸ்ட்’ செய்தித்தாள் குறிப்பிட்டது.
திருவாட்டி லாம் தமது உரையில், “பல்
கலைக்கழக வளாகத்தில் மோசமான நிலைமை ஏற்பட்டதை எண்ணி மிகவும் வருந்துகிறோம். கலவரக்காரர்கள் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரின் ஒத்துழைப்பு மூலமே அமைதியான தீர்வை எட்டமுடியும்.
“அவர்கள் அனைவரும் வன்முறையைக் கைவிட்டு ஆயுதங்களைக் களைந்து அமைதியாக வெளியே வந்து போலிசின் உத்தரவுகளை ஏற்க வேண்டும்,” என்றார்.
ஆறு மாதத்தைத் தொட்டு இருக்கும் ஹாங்காங் போராட்டம் திங்கட்கிழமை மோசமான நிலையை எட்டியது.
போலிசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் நடைபெற்ற மோதல்களால் எங்கு பார்த்தாலும் தீப்பிடித்து எரிந்தது. கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டன. வாகனங்கள் ஆங்காங்கே எரிந்துகொண்டு இருந்தன.
கவ்லூன் பகுதியில் பலதுறைத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தினுள் இருந்த மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் நேற்று முன்தினம் மாலை பல்லாயிரம் பேர் ஒன்றுதிரண்டு சென்றபோது அதிகமான மோதல்கள் மூண்டு இரவு முழுவதும் நீடித்தன. அப்போது பத்துக்கும் மேற்பட்ட மாணவர்களைக் கைது செய்த போலிசார் அவர்களைக் கடுமையாக நடத்தினர்.