பாகிஸ்தானில் மணப்பெண் ஒருவர் 'தக்காளி நகைக'களைத் திருமணத்தின்போது அணிந்து பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.
ஒரு கிலோ தக்காளியின் விலை 300 ரூபாயைத் தாண்யுள்ளது; சாமானிய மக்கள் தக்காளியை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
உயர்ந்துவரும் தக்காளி விலையையும் தளர்ந்துவரும் பாகிஸ்தானின் மோசமான பொருளாதார நிலையையும் உலகத்தாருக்கு சுட்டிக்காட்டும் வகையில் பாகிஸ்தான் மணப்பெண் ஒருவர், தனது திருமண அலங்காரத்தில் தங்க நகைகளுக்குப் பதிலாக ‘தக்காளி நகை’களை அணிந்திருக்கிறார்.
கழுத்து, காது, கைகளில் தக்காளிப் பழங்களைக் கோத்து செய்யப்பட்ட நகையை அணிந்திருந்தார் அவர்.
தலையில் நெத்திச்சுட்டியாக ஒரு தக்காளிப் பழம் அலங்கரித்திருந்தது.
தங்கத்திற்கு நிகராக தக்காளியை ஒப்பிட்டிருந்த அவரது புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் வெகுவாகப் பகிரப்பட்டுவருகின்றன.
உள்ளூர் செய்தியாளர் ஒருவருடன் பேசிய மணப்பெண், தனது குடும்பத்தினர் தனக்கு திருமண சீதனமாக மூன்று கூடை தக்காளியைப் பரிசளித்திருப்பதாகக் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் தக்காளியின் விலை எக்கச்சக்கமாக உயர்ந்துள்ளது. இந்தியா, ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து தக்காளி இறக்குமதி தடை செய்யப்பட்டது விலை உயர்வுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
தக்காளியின் விலையைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.