மலேசியாவை ஆளும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கெஅடிலான் ரக்யாட் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம், யார் வேண்டுமானாலும் பிரதமராகலாம் என்று கூறியுள்ளார்.
ஆனால் ரகசிய சந்திப்புகள் வேண்டாம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். கடந்த திங்கட்கிழமை கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவரான அஸ்மின் அலி தனது அதிகாரபூர்வ வீட்டில் எதிர்க்கட்சியான அம்னோ தலைவர்களையும் பிகேஆர் எம்பிக்களையும் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு கெஅடிலான் கட்சிக்குள்ளாகவே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அம்னோ கட்சியினரை அஸ்மின் அலி ரகசியமாக சந்தித்துப் பேசியுள்ளார் என அவரது கட்சியினரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் டாக்டர் மகாதீர் தொடர்ந்து பிரதமராக நீடிப்பதை உறுதிப்படுத்தவே இந்தக் கூட்டம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அன்வாரின் கருத்து வெளியாகியுள்ளது.
“பிரதமர் பதவி மீது விருப்பமுள்ளவர்களை தடுத்து நிறுத்தப் போவதில்லை. ஆனால் முறையான வழியைப் பின்பற்ற வேண்டும். நாட்டின் பொருளியலை மேம்படுத்த வேண்டியுள்ளது, மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளன. தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் அடைந்த மோசமான தோல்வியிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் பெரும் பிரச்சினையில் சிக்கிவிடுவோம்,” என்று அன்வார் எச்சரித்தார். இம்மாதம் 16ஆம் தேதி நடைபெற்ற தஞ்சோங் பியாய் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பானில் இடம் பெற்றுள்ள கெஅடிலான் கட்சிக்கு மோசமான தோல்வி ஏற்பட்டது.
இது, பக்கத்தான் ஹரப்பான் சந்தித்துள்ள நான்காவது தோல்வியாகும். இதற்கிடையே அமைச்சர வையை மாற்ற மகாதீர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.