ஹாங்காங்: திட்டமிட்டபடி வரும் ஞாயிற்றுக்கிழமையன்று மாவட்ட நிர்வாக மன்றத்தின் தேர்தல் நடைபெற ஹாங்காங் அரசு விரும்பினாலும் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்து வருவோரின் நடவடிக்கைகளைப் பொறுத்து தேர்தல் அமையும் என்று நேற்று தலைமைச் செயலாளர் மேத்யூ சியோங் கூறினார்.
இதனால் தேர்தல் சுமுகமாக நடைபெற, ஆர்ப்பாட்டக்காரர்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று நேற்று திரு சியோங் செய்தியாளர்களிடம் கூறினார்.
“இரண்டு கைகள் தட்டினால் மட்டுமே ஓசை வரும். சட்ட ஒழுங்கை நிலைநாட்ட நாங்கள் என்னதான் முயற்சி எடுத்தாலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒத்துழைக்கிறார்களா என்பதே முக்கியம்.
“அவர்கள் வன்முறையில் ஈடுபடத் தொடங்கி, சாலைகளை மறைத்துக்கொண்டும் போக்குவரத்தைத் தடுத்துக்கொண்டும் இருந்தால், பொதுமக்களுக்கு வாக்குச் சாவடிகளுக்குச் செல்வது மிகச் சிரமமாகிவிடும்,” என்றார் அவர்.
அத்துடன் இந்தத் தேர்தல் மிகப் பெருமளவிலானது என்றும் ஒவ்வொரு தொகுதிக்கும் போட்டி நடக்கவுள்ளதால் இது அர்த்தமுள்ள ஓர் ஜனநாயக நிகழ்வு என்றும் திரு சியோங் சுட்டினார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்றும் தொடர்ந்து போக்குவரத்தில் தடங்கலை ஏற்படுத்தியதன் மத்தியில் திரு சியோங் இவ்வாறு கூறினார்.
உலகத்தின் கவனத்தையே ஈர்த்துள்ள அண்மைய வன்முறை நிறைந்த பல்கலைக்கழக முற்றுகையை அடுத்து இந்த வார இறுதியில் நிலைமை இன்னும் மோசமாகக்கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
ஜனநாயகத்தைக் குறிக்கும் ஒரு நடவடிக்கையாக நடைபெறவுள்ள இந்தத் தேர்தல், ரத்து செய்யப்பட்டால் வன்முறை கட்டுக்கடங்காமல் வெடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
வாக்காளர்கள் ஒரு பாதுகாப்பான சூழலில் வாக்களிக்க முடியாவிட்டால், ஒரு நியாயமான தேர்தலை நடத்தச் சிரமமாகிவிடும் என்று நேற்று முன்தினம் நிர்வாகத் தலைவர் திருவாட்டி கேரி லாம் கூறியிருந்தார்.