ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் புதர்த்தீ ஏற்பட்டு சுமார் 2.5 மில்லியன் ஏக்கர் நிலம் புதர்த்தீக்கு இரையாகியுள்ளது. அப்பகுதியின் வனங்கள் நாசமாகி அங்கு வாழும் வனவிலங்குகளுக்குப் பேராபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் அதிகம் காணப்படும் கோலா கரடிகள் இந்தப் புதர்த்தீயால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான கோலா கரடிகள் மடிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. புதர்த்தீயை அணைப்பதிலும் அதில் சிக்கியுள்ள கோலா கரடிகளைக் காப்பாற்றும் பணியிலும் பலர் ஈடுபட்டுள்ளனர்.
வனவிலங்குகளைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுள்ள டோனி டோஹெர்டி எனும் ஆஸ்திரேலியப் பெண், தீயில் கருகி காயமடைந்த ஒரு கோலா கரடியை தன்னலங்கருதாமல் காப்பாற்றியிருப்பது பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
தீக்காயம் ஏற்பட்ட கோலா கரடி ஒன்று தப்பிக்க வழி தெரியாமல் பற்றி எரியும் தீயின் பக்கம் ஓடியது. தன்னைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் அந்தக் கரடி இருக்கும் இடத்துக்குச் சென்றார் டோனி.
அந்தக் கோலா கரடிக்கு கடுமையான காயம் ஏற்பட்டிருப்பதை உணர்ந்த டோனி தான் அணிந்திருந்த சட்டையைக் கழற்றி அதில் அந்தக் கோலா கரடியைச் சுற்றி பத்திரமாக மீட்டு வந்தார்.
பின்னர் அதற்கு அருந்துவதற்கு தண்ணீர் அளித்து, அதன் மீது தண்ணீரை ஊற்றிய அந்தப் பெண், அருகில் இருந்த வனவிலங்கு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று வைத்தியமும் பார்த்துள்ளார்.
இவரது இந்த முயற்சியை ஆஸ்திரேலியர்கள் மட்டுமின்றி உலகமே பாராட்டி வருகிறது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity