ஹாங்காங்: ஹாங்காங் பல்கலைக்கழகத்தை போலிசார் சுற்றி வளைத்துள்ள நிலையில் ஆர்ப்பாட்டக் காரர்களில் 8 பேர் போலிசாரிடம் சரண் அடைந்துள்ளதாக போலிஸ் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
அந்த பல்கலைக்கழகத்திற்குள் இருந்துவரும் மற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் தப்பித்துச் செல்வதற்கான வழிகளை தேடிக்கொண்டிருப்பதாககூறப்படுகிறது. இன்னமும் ஆர்ப்பாட்டக்காரர்கள் 100 பேர் பல்கலைக்கழகத்தினுள் இருப்பதாகத் தெரிகிறது.
சில நாட்களுக்கு முன்பு அந்த பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டது முதல் அதை போலிசார் சுற்றி வளைத்துள்ளனர். இதனால் அக்கல்லூரியைவிட்டு வெளியில் வரமுடியாமல் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு இருந்து வருகின்றனர். “நாங்கள் மிகவும் சோர்வடைந்து விட்டோம். பல்கலைக்கழகத்தைவிட்டு வெளியில் வர நேற்று முயற்சி செய்தோம். ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்து விட்டது,” என்று ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் கூறியிருக்கிறார். அங்கிருந்து தப்பித்துச் செல்ல வேறு வழி இல்லாத நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களில் இன்னும் சிலர் போலிசாரிடம் சரண் அடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர் களில் 8 பேர் கைகளை கோர்த்தவண்ணம் போலிசாரிடம் சரண் அடைவதைப் பார்த்ததாக ராய்ட்டர்ஸ் நிருபர் ஒருவர் கூறியுள்ளார்.
ஹாங்காங் சுதந்திரத்தில் சீனா தலையிடுவதாகக் கூறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 6 மாதங்களாக அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஹாங்காங் பல்ககலைக் கழகத்தினுள் இருந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆர்ப்பாட்டக்காரர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு ஹாங்காங் போலிஸ் படைத் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதன் மூலம் இப்பிரச்சினைக்கு அமைதித் தீர்வு கிடைக்கும் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.