இடது காலில் எரிச்சல், இரண்டு கால்களிலும் வலி என்று 63 வயது ஆடவர் ஒருவர் மருத்துவரை நாடினார்.
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த அவருக்கு இருந்த காய்ச்சல் அறிகுறிகள் கடுமையாக இருந்தன. மூச்சுவிட மிகுந்த சிரமப்பட்ட அவருடைய தோலில் தடிப்புகள் காணப்பட்டன.
ரத்த நுண்குழாய்களில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக ஏற்பட்ட அந்தத் தடிப்புகளால் அவரது கால்களின் நிறம் மாறியது.
சுமார் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையில் அவர் உடல் இருந்தாலும் அவரது இதயத்துடிப்பு சீராக இருந்ததாகக் கூறப்பட்டது.
சீரற்ற சுவாசம் காரணமாக அவரது உடலில் உள்ள திசுக்களுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து அவரது சிறுநீரகங்கள் செயலிழந்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.
இத்தனை பிரச்சினைகளும் எதனால் ஏற்பட்டன என்பதை மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அவருக்கு பாக்டீரியா தொற்று இருக்கலாம் என்று சந்தேகித்தனர் மருத்துவர்கள். ஆனால் அவரது உடலில் வெட்டுக்காயங்கள் ஏதும் இல்லை என்பதையும் அவர்கள் உறுதிசெய்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான்காவது நாள் அவரது ரத்த மாதிரியின் பரிசோதனை முடிவுகள் வெளியான பிறகே ஆரோக்கியமாக உள்ள வளர்ப்பு நாய்கள், பூனைகளின் எச்சிலில் இருக்கக்கூடிய ஒரு பாக்டீரியா தொற்றினால் அந்த ஆடவர் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
பெரும்பாலும் வளர்ப்பு நாய்கள் அல்லது பூனைகள் கடித்தால் மட்டுமே இந்த பாக்டீரியாக்கள் மனித உடலுக்குள் செல்லும். அவரது வளர்ப்பு நாய் அவரது கால்களில் நக்கியதாக மட்டுமே கூறப்பட்டது.
தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட அவருக்கு தோல் மடிதல், ரத்தம் கட்டுதல், தோலின் மீது புள்ளிகள் தோன்றுதல் போன்ற பல அறிகுறிகள் தென்பட்டதுடன் அவரது உள்ளுறுப்புகளும் செயலிழந்தது தெரியவந்தது.
நோயெதிர்ப்பு மருந்துகளுடன் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அடுத்த 30 மணி நேரத்தில் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. மூளையிலும் வீக்கம் தென்பட்டது.
அவரது உடல் நிலையில் முன்னேற்றம் தெரியாத நிலையில், சிகிச்சையின் தீவிரத்தைக் குறைக்க அவரது உறவினர்கள் முடிவு செய்தனர்.
சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட 16 நாட்களில் அவர் உயிரிழந்தார்.
சி.கானிமோர்சஸ் எனும் பாக்டீரியாவால் அவர் பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தக் கிருமியால் பாதிக்கப்பட்டவர்களில் 25 விழுக்காட்டினர் உயிரிழப்பதாகக் கூறப்பட்டது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity