இலங்கையில் ராஜபக்சே குடும்பத்தின் ராஜாங்கம் மீண்டும் ஆட்சிக்குத் திரும்பியதில், அவர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல், ஊழல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகளும் செய்தியாளர்களும் நாட்டை விட்டு ஓடுவதாக கூறப்படுகிறது.
கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் ஊழியர் ஒருவர், அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு தூதரகத்தின் ரகசிய தகவல்களைத் தரக் கட்டாயப்படுத்த சம்பவம் குறித்து சுவிட்சர்லாந்தின் வெளியுறவு அமைச்சு கூறியது.
இதன்வழி அண்மையில் சுவிட்சர்லாந்தில் தஞ்சம் புகுந்த இலங்கை நாட்டவர், அவர்களுக்கு உதவியோர் ஆகியோரைப் பற்றிய விவரங்களைக் கொண்டிருந்த ஊழியரின் கைபேசியையும் அந்த மர்ம நபர்கள் கைப்பற்றினர்.
திரு கோத்தபய ராஜபக்சே அதிபர் தேர்தலில் வென்றதை அடுத்து தங்களின் பாதுகாப்புக்கு அஞ்சி ஓடியவர்களைப் பற்றிய தகவல்களைப் பெறவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
தூதரகத்தில் பெண் ஊழியர் அச்சுறுத்தப்பட்ட அதே நாளில் ராஜபக்சே குடும்பத்தின்மேல் விசாரணை மேற்கொண்ட இலங்கை போலிஸ் பிரிவைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்டவர்கள் மீது திரு ராஜபக்சே பயணத் தடை விதித்திருந்தார்.
ராஜபக்சே குடும்பத்தை வெகுவாக விமர்சித்து வந்த ஒரு செய்தி நிறுவனத்திலும் போலிஸ் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கிருந்த பல செய்தியாளர்கள் விசாரணைக்காக தங்களின் கணினிகளைத் தர வேண்டியிருந்தது. வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துகளைக் கொண்டுள்ளதாக அச்செய்தி நிறுவனத்தின்மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதற்கிடையே தூதரகத்தில் பெண் ஊழியர் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் எந்தத் தகவலையும் தாங்கள் அறியவில்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஆனால் சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் இச்சம்பவத்தை உறுதி செய்ததுடன் தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளது. உடனே இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என்று சுவிஸ் அரசு முறையிட்டுள்ளது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity