வாஷிங்டன்: போலி கல்வி விசா விவகாரத்தில் மாணவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் அமெரிக்க அரசின் கொடூரமான நடவடிக்கை என்று விமர்சித்துள்ளார் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பெண் எம்பியும் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளவர்களில் ஒருவருமான எலிசபெத் வாரன்.
மேலும் மாணவர்கள் போலி பல்கலைக்கழகம் எனத் தெரியாமலேயே சேர்ந்ததாகவும் அரசாங்கம் திட்டமிட்டே அப்பாவி மாணவர்களை வலையில் சிக்க வைத்ததாகவும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.
வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் கல்வி பயில்வதற்கான ‘எப் 1’ விசா காலம் முடிவடைந்த பிறகு பணி விசாவுக்காக காத்திருப்பவர்களில் பலர் முறைகேடாக அமெரிக்க அரசை ஏமாற்றி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இந்த முறைகேட்டை தடுத்து நிறுத்தும் வகையில், போலி பல்கலைக்கழகங்கள் மூலம் கல்வி விசாக்களை பெற்று அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்க முயற்சி செய்யும் நபர்களைக் கண்டறிவதற்காக அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறையே ஒரு போலியான பல்கலைக்கழகத்தை உருவாக்கியது.
மிச்சிகன் மாகாணத்தின் டெட்ராய்ட் நகரில் பார்மிங்டன் பல்கலைக்கழகம் என்ற பெயரில் போலி பல்கலைக்கழகத்தை ஐசிஇ இந்த ஆண்டின் தொடக்கத்தில் உருவாக்கியது. இதனை அறியாத வெளிநாட்டு மாணவர்கள் பலர் இந்த பல்கலைக்கழகத்தில் சேர்ந்தனர்.
இதையடுத்து விசா முறைகேட்டில் ஈடுபட்டதாக பல வெளிநாட்டினர் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்பது கூடுதல் அதிர்ச்சியளிக்கக்கூடிய தகவல் ஆகும்.
இதுகுறித்து அமெரிக்க குடியேற்றம் மற்றும் அமலாக்கத்துறையின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, “கடந்த ஜனவரியில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் சட்ட நடவடிக்கையின் மூலம் இதுவரை 251 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
"இதில் கிட்டத்தட்ட 80 சதவிழுக்காட்டினருக்கு, அவர்களாக நாட்டை விட்டு வெளியேற உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 20 விழுக்காட்டினருக்கு இறுதி உத்தரவு வழங்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேற கெடு விதிக்கப்பட்டுள்ளது என்றார்.