இன்னும் ஒரு சில நாட்களில் மலேசியாவின் பிகேஆர் கட்சி மாநாடு நடைபெற இருக்கும் வேளையில் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து வாக்கெடுப்பு நடத்த பல்வேறு இளையர் அணி தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். அவர்கள் அனைவரும் கட்சியில் போட்டித் தலைவராக உருவாகி வரும் அஸ்மின் அலியின் ஆதரவாளர்கள்.
மலேசியாவின் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிகேஆர், அண்மைக்காலமாக உட்கட்சிப் பூசலில் சிக்கித் தவித்து வருகிறது. கட்சியின் துணைத் தலைவரும் பொருளியல் விவகார அமைச்சருமான அஸ்மின் அலி தலைமையில் அதிருப்தியாளர்கள் அணி திரண்டு வருகின்றனர்.
தலைமையை ஆதரிக்காதவர்கள் கட்சியில் இருந்து விலக்கப்படும் செயலை இந்த இளையர் அணித் தலைவர்கள் கண்டித்து வருகின்றனர். கட்சியின் சீர்திருத்தத் திட்டத்தை திரு அன்வார் கீழறுப்பு செய்து வருவதாக நேற்று அவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கை குறிப்பிட்டது.
பிகேஆர் மத்திய செயலவை உறுப்பினரும் மூத்த அரசியல்வாதியுமான ஸக்கரியா அப்துல் ஹமித் ஊழல் சந்தேகத்தின் பேரில் கட்சியிலிருந்து விலக்கப்பட்டதற்கு இவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
வரும் 5ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை மலாக்காவில் தனது 14வது தேசிய மாநாட்டை பிகேஆர் கட்சி நடத்த உள்ளது.
ஆனால், அந்த மாநாட்டு தேதிகளில் ஒன்றான 6ஆம் தேதி போட்டி மாநாடு ஒன்று நடத்த அஸ்மின் அலி தரப்பு திட்டமிட்டு இருப்பதாக ‘த ஸ்டார்’ இணையச் செய்தி குறிப்பிட்டு உள்ளது.
கட்சிக்கு விரோதமான செயல் இது என்றபோதிலும் தங்களது ஆதரவு பலத்தை தலைவர் அன்வாருக்கு உணர்த்த போட்டி மாநாட்டுக்கு அவர்கள் ஏற்பாடு செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஆனால் பிகேஆர் கட்சி நடத்தும் தேசிய மாநாடு மட்டும்தான் அதிகாரபூர்வமானது என்று அக்கட்சியின் ஆலோசனை மன்றத் தலைவரும் துணைப் பிரதமருமான டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் தெரிவித்து உள்ளார்.
பாண்டான் நாடாளுமன்றத் தொகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, போட்டி மாநாடு பற்றி கேட்கப்பட்டதற்கு இவ்வாறு பதிலளித்தார்.
கிட்டத்தட்ட 21 ஆண்டு காலமாக இயங்கி வரும் பிகேஆர் கட்சியில் தற்போது சுமார் ஒரு மில்லியன் உறுப்பினர்கள் இருப்பதாகவும் இவ்வாரம் நடைபெற இருக்கும் தேசிய மாநாட்டில் உட்கட்சிப் பூசலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தீர்வு காணப்படும் என்றும் டாக்டர் வான் அஸிஸா கூறினார்.